கொரோனா: சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எல்.இ.டி திரையில் படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்த சீனா அரசு!

சீனாவிலுள்ள வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், மருத்துவனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதால், 1000 நோயாளிகள் படுக்கும் வசதிகளை கொண்ட ஒரு புதிய மருத்துவமனையை சீன அரசாங்கம் 10 நாட்களில் கட்டி முடித்தது.

இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள், மாதக் கணக்கில் தங்களின் வீடுகளுக்கு செல்லாமல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி, அதில் சிலர் உயிரிழந்துள்ளனர். பின்னர் பணியாற்றிய அனைவருக்கும் உடம்பு மற்றும் முகத்தில் புண்கள் ஏற்பட்டது.

 

இதனிடையே சீனாவில் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில், ஒருவரை கூட கொரோனா வைரஸ் தாக்கவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து, அங்கு இயல்பு நிலை தற்போது திரும்பியுள்ளது. 

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், மருத்துவபணிகளை சிறப்பாக முடித்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பெருமைப் படுத்தும் விதமாக 18 நகரங்களில் கிட்டதட்ட 50 ஆயிரம் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மூலம் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, சீன அரசு நன்றி தெரிவித்து வருகிறது.