பட்ஜெட்டில் கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு!

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி  அறிக்கையில்  8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அருண்ஜேட்லி அறிவித்தார். நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரும் நிதி ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு 5 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஊரக பகுதி சாலை திட்டம் மூலம் சுமார் 3 கோடியே 21 லட்சம் பேருக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளதாகவும், 8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அருண்ஜெட்லி குறிப்பிட்டார். மாணவர்களுக்கு கல்வியை நவீன முறையில் வழங்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் எனவும், கல்வி கற்பிக்கும் முறையை கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயில் 99 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக தரம் உயர்த்தப்படும் எனவும், 10 சுற்றுலா நகரங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டு மிகச்சிறந்த சுற்றுலாப் பகுதிகளாக மாற்றப்படும் எனவும் அவர் அறிவித்தார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வரும் நிதி ஆண்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜேட்லி, 500 நகரங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் என்பதில் அம்ருத் திட்டம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

19 ஆயிரத்து 428 கோடிரூபாய் மதிப்பிலான, குடிநீர் விநியோகத்திற்கான 494 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள் உயர்வேக இணைய இணைப்பை பெறும் வகையில் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன எனவும், கிராமப்புறங்களில் 5 லட்சம் வை-ஃபை ஸ்பாட்டுகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment