கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பஞ்சாபில் பதுங்கியிருந்த மேலும் இருவரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை வைசியர் தெருவில் ஸ்வர்ண கலஷ் ஜுவல்லரி உள்ளது. இதன் 2 ஊழியர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 11–ல் தங்க நகைகளை விற்க பெங்களூரு சென்றனர். விற்றது போக மீதமிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ நகைகளுடன் அன்று இரவு கர்நாடகா அரசு பேருந்தில் கோவை திரும்பினர். அப்போது நகை பெட்டியை தங்கள் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தனர். கோவை வந்தடைந்த பிறகு நகைகள் அடங்கிய பெட்டி கொள்ளை போனது தெரியவந்தது.