வொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரித்தானதா?! அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன?!

வொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப் பரிச்சயமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக ஐடி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது லாக்டோன் சூழலில் அனைவரையும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பான்மையான துறைகள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை பயன்படுத்தினார்கள். TCS போன்ற முக்கியமான ஐடி நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் தங்கள் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களை வொர்க் ஃப்ரம் ஹோம்யில் ஈடுபடுத்த போவதாக திட்டமிட்டுள்ளது.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் எல்லா துறைகளுக்கும் செயல்படுத்த வாய்ப்பு இல்லை காரணம் சில துறைகளுக்கு அடிப்படையான சில கட்டமைப்புகள் வேண்டும். அந்தக் கட்டமைப்பை வீடுகளில் உருவாக்க முடியாது ஏன் ஐடி நிறுவனங்களில் கூட பயன்படுத்தப்படும் மென்பொருள் எல்லா நெட்வொர்க்கில் இயங்க கூடியது அல்ல. பாதுகாப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள் அதை குறிப்பிட்ட நெட்வொர்க்கின் பயன்படுத்துவது போலவே வடிவமைத்துள்ளனர். லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் சம்மந்தமான ஒரு ஆய்வறிக்கை வந்தது. அதில் இந்தியாவில் பெருவாரியான ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைகளில் ஊழியர்களை ஈடுபடுத்த போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றது என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் முடிவு. அதாவது அடிப்படையான லேப்டாப் இன்டர்நெட் மற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை வாங்குவதற்கான தனிதிறன் போன்ற பல அம்சங்கள் குறைவாக உள்ளது இதற்கான அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கிய பிறகு தான் முழுமையாக வொர்க் பிரம் ஹோம் சாத்தியம்.

குறிப்பாக தமிழகத்தில் தற்போது வேலை செய்யக்கூடிய ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், போன்ற முக்கியமான நகரங்களை மையப்படுத்தியே வேலை பார்த்து வந்தனர். இந்த நகரங்களில் அந்தந்த ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கும். ஆனால் லாக்டவுன் காலகட்டத்தில் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பிய ஊழியர்கள் பெரும்பாலானோர் அவர்களின் சொந்த கிராமங்களில் இருக்கும்போது வொர்க் ஃப்ரம் ஹோம் எப்படி சாத்தியமாகும். அப்படி அவர் வொர்க் பிரம் ஹோம்மில் ஈடுபடும்போதுதான் தன் வேலையை செய்வதற்கு முயற்சி எடுப்பார் இது அவருக்கு உளவியல் ரீதியான மன அழுத்தத்தை தர வாய்ப்பிருக்கிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம் சம்பந்தமாக பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஹரி பிரியாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘ பொதுவாக நாங்கள் அலுவலகத்துக்கு செல்லும்போது அதிகபட்சம் 9 மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால் வொர்க் ஃப்ரம் ஹோம் எங்கள் வேலை நேரத்தை 12 மணிநேரம் வரை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் இந்த மாதிரியான சூழல் அலுவலகத்தில் ஏற்படுவது உண்டு அது மிக முக்கியமான வேலையாக இருக்கும்போது மட்டும்தான். ஆனால் வீட்டிலிருந்து பணிபுரியும்போது அப்படி இல்லை இயல்பாகவே குறைந்தது பத்து மணி நேரம் வேலை பார்ப்பதற்கான சூழல் உருவாகிறது. இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டம் முழுவதும் இதன் எங்கள் நிலைமை. இது இயல்பாகவே மனதளவில் ஒரு அழுத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. இதில் மிகப்பெரிய பிரச்சினையே நான் இருக்கக்கூடிய பகுதியை எடுத்துக்கொண்டால் இங்கு பெரிய அளவில் இன்டர்நெட் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அலுவலகத்தில் அப்படியான பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் வசதியும் சீராக இருக்கும். இதற்கு அடுத்து பெருவாரியாக எங்கள் நிறுவனத்தில் குழுவாகதான் நாங்ள் வேலையில் ஈடுபடுவது உண்டு ஆனால் இந்த காலகட்டத்தில் வேலைகளை பரிமாறி கொள்வதில் எனக்கும் எங்கள் குழுவினருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இருக்கிறது. அலுவலகத்தில் எங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப ரீதியாக பிரச்சனை இருந்தால் அதை உடனடியாக சரி செய்யவோ அல்லது என் குழுவில் யாரையாவது ஒருவரை உதவிக்கு அழைப்பேன். ஆனால், தற்போது அப்படி எந்த வாய்ப்பும் வொர்க் பிரம் ஹோம்மில் இல்லை. நான் பரவாயில்லை என்னுடன் பணிபுரியும் பலர் குக்கிராமத்தில் உள்ளனர். அவர்களுக்கு என்னை விட அதிகமான பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஐடி நிறுவனத்தில் மட்டுமல்ல. ஐடி நிறுவனத்தை போல் தன்மையுடன் செயல்பட கூடிய நிறைய துறைகள் இங்கு உள்ளது அதில் வேலை பார்க்கக் கூடிய எனது நண்பர்களுக்கும் இதே பிரச்சனைதான்.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் இன்னொரு பெரிய பிரச்சனை உடல் ரீதியாக ஏற்படுகிறது. காலையில் 9 மணிக்கு ஒரு இடத்தில் வேலை செய்ய தொடங்கினால், மீண்டும் அந்த வேலை முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு வாய்ப்பில்லை. அலுவலகத்தில் குளிர்சாதன வசதி இருக்கும். இதனால் பெரிய அளவில் உடல் சோர்வு ஏற்படாது. ஆனால் வீடுகளில் அப்படியான சூழல் இல்லை அதுவும் தற்போது இந்த வெயில் காலத்தில் ரொம்ப அதிகமான உடல் சோர்வு ஏற்படுகிறது. மேலும், நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சில வேலைகளை முடிக்க வேண்டியதும் உள்ளது. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது இயல்பான வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டு உள்ளது. என்னால் இயல்பாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசவோ அவர்களிடம் நேரத்தை செலவிடவும் முடியவில்லை. உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் ஐடி ஊழியர்களான நாங்கள் உணர்கிறோம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் சம்பந்தமாக உளவியல் நிபுணர் தாரண்யா சேதுபதியுடன் பேசினோம். அவர் கூறுகையில், ‘ இந்த காலங்களில் அதிக அளவிலான உளவியல் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோமில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது அதற்கான மாற்று எதிர்வினைகளும் உளவியல்ரீதியாக ஏற்படுவதுண்டு. இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்யை பாஸ்டிவாக பார்த்தால் முன்பைவிட ஒருவர் அதிக அளவில் தங்கள் நேரத்தை வீட்டிகளில் செலவிடுதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தங்கள் வீட்டிலுள்ள உறவினர்கள் வேலை செய்பவர் என்ன மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கலை அதில் சந்திக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. ஆனால், உளவியல் ரீதியாக தங்கள் வேலை நேரத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை தங்கள் வீட்டில் உள்ள உறவினர்களிடம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு தேவையான உறக்கமும் அவர்களின் உணவு பழக்கவழக்கமும் மாற வாய்ப்பிருக்கிறது. இது உடல்ரீதியான பிரச்சனைகளை விளைவிக்கலாம். பொதுவாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் உளவியல் ரீதியாக எந்த அழுத்தத்தையும் பணி செய்யும்போது சந்திக்கக்கூடாது என்று தஙகள் அலுவலகத்திலேயே அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதற்கான  ஏற்பாடு இருக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் அப்படியான வாய்ப்பு இல்லை. இது அவர்களுக்கு அந்த வேலையின் மீது இருக்கக்கூடிய ஆர்வத்தை குறைக்கலாம். இந்த மாதிரியான சூழலில் நிறுவனங்களும் ஊழியர்களும் உளவியல் ரீதியாக தங்களை பாதுகாத்துக்கொள்ள சில முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யக்கூடிய நபர் வீட்டில் இருந்தபடி ஏதாவது விளையாட்டை விளையாடுவது போன்ற பிசிகல் வொர்க் செய்ய வேண்டும். அதேபோல் ஊழியர்களுக்கும் ஏற்றதுபோல பிசிகல் ஒர்க்கை செய்வதற்கான வாய்ப்பை நிறுவனங்கள் உருவாக்கி தரும் பட்சத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் ஈடுபட்ட ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. சமீபத்திய உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல் என்பது இந்தியா அடுத்த ஒரு பெரிய நோயால் பாதிக்கப்படும் என்றால் அது மன அழுத்தமே. அப்படியான மன அழுத்தத்தை தர கூடிய சூழலையை நாம் வெகு தொலைவில் வைக்க வேண்டும் என்பதே இந்தக் காலகட்டம் நமக்கு உணர்த்துகிறது என்றார்.

-ஆ.லட்சுமி காந்த் பாரதி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.