நாக்பூரில், இன்று இரண்டாவது டி-20 போட்டி, திருப்பிக் கொடுக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்று நடக்கும் இரண்டாவது டி-20 போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும், தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும் களமிறங்குகின்றன.

இந்தியா தொடர்ந்து பௌலிங்கில் திணறி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்தும் மோசமான பௌலிங் மற்றும் பீல்டிங்கால் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. புவனேஷ்வர் குமாரும் டெத் ஓவர்களில் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வ்ருகிறார்.

இன்றைய போட்டியில் பும்ரா களமிறங்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியை வெல்லும் பொருட்டு, இரு அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடிய கேமரூன் க்ரீன் மற்றும் மேத்தியூ வேட் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு, இப்போட்டி தொடங்கவிருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

 

author avatar
Muthu Kumar

Leave a Comment