ஏர் இந்தியாவே மீண்டும் வருக! – ரத்தன் டாடா நெகிழ்ச்சி ட்வீட்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதற்கு ட்விட்டரில் டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா வரவேற்பு.

நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது.

டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி செய்ததாகவும் மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் ரூ.15,300 கோடி கடனையும் டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கியதற்கு டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஏர் இந்தியாவே மீண்டும் வருக என்று தெரிவித்த அவர், ஜே.ஆர்.டி.டாடா தலைமையின் கீழ் மிகவும் கவுரவும், மரியாதையும் பெற்றிருந்த ஏர் இந்தியாவை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வருவோம் என்றும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கிய மத்திய அரசின் கொள்கை முடிவை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்