“நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் ” – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்..!

நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நீண்ட காலமாக பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளை தயாரித்தும் வந்துள்ளனர்.இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகள், தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம்  பாதுகாத்து வந்தது.இவை நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது.மேலும்,இந்த ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நெசவு – செழிப்பு:

குறிப்பாக,தமிழகத்தில் இராஜராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது என்றும்,மேலும்,தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில்,நடராஜரை வழிபடுவதான காட்சி தற்போதும் இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு,காலம் காலமாக மிகவும் சிறப்பு வாய்ந்த நெசவுத்தொழிலையும், நெசவாளர்களையும் நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ‘தேசிய கைத்தறி(நெசவு) நாள்’ கொண்டாடப்படுகிறது.அதன்படி,இன்று பலரும் நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாம் சுதந்திரமானவர்கள்:

இந்நிலையில்,நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும்தோறும் நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம்”, என்று பதிவிட்டுள்ளார்.

பண்பாட்டின் அடையாளம்:

முன்னதாக , இன்று காலை தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், “நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பிரதிபலிக்கும் நெசவுத்தொழில் மென்மேலும் சிறக்க நெசவாளர் நலன் காக்கும் இவ்வரசின் நெஞ்சம் நிறைந்த அனைவருக்கும் தேசிய கைத்தறி நாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

மேலும், உழைக்கும் மக்களின் உன்னத அடையாளம் இராட்டை என்றார் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள்.அந்த மக்களின் உழைப்பில் உருவாகும் கைத்தறி ஆடைகள் நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளமாகும். கைத்தறி ஆடையை உடுத்துவோம்! அதன் பெருமையை உலகிற்கு உணர்த்துவோம் என்றும் கூறினார்”,என்பது குறிப்பிடத்தக்கது.