அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் உடன் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து ஆக்சிஜன்  தேவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  ஆக்சிஜன் உபயோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை ஒவ்வொரு மாநிலங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு மாநிலத்திற்கும் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உதவி செய்ய உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை வழங்க, உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப ஆக்சிஜனை உடனடியாக வழங்க முடியும் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பயண நேரத்தை  குறைப்பதற்காக தான் ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பும் பயண நேரத்தை குறைப்பதற்காக வெற்று ஆக்சிஜன் டேங்கர்களை கொண்டு செல்ல   விமானத்தை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.