‘ஒடுக்கு முறைகளுக்கு எதிரான எச்சரிக்கை மணி’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து..!

நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி,  திரைக்கு வந்துள்ள ஜெய் பீம் திரைப்படமானது அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள்  பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. அந்த வகையில், இப்படம் குறித்த சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகமான நேர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில்,நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தங்களின் நடிப்பும், இதரக் கலைஞர்களின் நடிப்பும் மிகச்சிறப்பான முறையிலும் மக்களை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. ஒரு உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய இயக்குநர் திரு த.ச.ஞானவேல் அவர்களின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த தங்கள் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராஜாக்கண்ணு மற்றும் அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்திய களப்போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக ராஜாக்கண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து பெற்று தர முடிந்தது. இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதிப் பெருமையடைகிறோம்.

பொதுவாக ஒரு உண்மைச்சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள திருமதி பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் இத்தகைய சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகள் தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.