‘பொறுத்திருந்து பாருங்கள்’ – பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு – எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் மாவட்டம்  எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து அமையவுள்ள கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி முறிவால் வாக்குகள் சிதறாது. தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை நாங்கள் பின்னர் அறிவிப்போம்.

தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 95 சதவிகித வாக்குறுதிகள் நிரைவேற்றப்பட்டு விட்டதாக பச்சை பொய்யை கூறிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விவசாயிகளின் நலன் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க தான் சந்தித்தனர். நிர்மலா சீதாராமணி சந்தித்தற்கும், கூட்டணி குறித்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை. திமுக மச்சாள் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை சந்த்தித்தால் கூட்டணி என அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

I.N.D.I.A கூட்டணி என்பதே நாடகம்தான், இன்னும் முழு வடிவம் பெறவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே டெல்டா பாசன விவசாயிகள் மீது, தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால், ஒவ்வொரு மாதமும் நீதிமன்றம் அளித்த அழிவுறுத்தலின் படி, கர்நாடகா அணையில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் கும்பகரணம் போல தூங்கி விட்டார். காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.