விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் !

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ளது.ஆகவே நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர் விவசாயிகள்.

இதனிடையே இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்  கூடவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.