தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha) வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த விழா அரசியல் உள்நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா. ராமர் கோயில் இன்னும் முழுதாக கட்டிமுடிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அவசர அவசரமாக தற்போது ராமர் கோயில் விழா நடைபெற உள்ளது என பல்வேறு காரணங்களை கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் என பலவேறு கட்சியினர் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொள்வது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன்னர் கூறுகையில், அதிமுக மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. எங்கள் கட்சியில் இருப்பவர்கள் ராமர் கோயிலுக்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். எனக்கு உடல்நிலை சரியில்லை . கால்வலி இருப்பதால் என்னால் ராமர் கோயில் விழாவுக்கு செல்ல முடியாது என தான் கலந்துகொள்ளவில்லை என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்தினார்.

இன்று சென்னையில், திமுக இளைஞரணி ஜோதி ஏற்றும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து பற்றி விமர்சித்தார். அவர் அடிக்கடி தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் அவருக்கு கால்வலி ஏற்பட்டு இருக்கும் என தனது விமர்சனத்தை அமைச்சர் உதயநிதி முன்வைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.