ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டத்தை சென்னை சிம்சன் பெரியார் சிலையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் ஓட்டத்தை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுகவின் இளைஞரணி மாநாடு மழையால், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 3ல் இருந்து 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வருபவர்களுக்கு போக்குவரத்து, உணவு, இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்ற தலைப்பில் தான் மாநாடு நடைபெற உள்ளது.

வரும் 20ம் தேதி மாலை மாநாடு நடைபெறும் பந்தலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார். அப்போது சுடர் அவர் கையில் கொடுக்கப்பட்டு, மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகளை தொடங்கி வைப்பார் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ராமர் கோயில் திறப்பு குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து கூறியதாவது, நாங்கள் எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் அமைவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்