கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்….!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை  உளவு பார்த்ததற்காக அபராதம் செலுத்துமாறு,அல் கைமாவில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார்.மேலும்,அவரது கணவரின் புகைப்படங்களையும்,பதிவுகளையும் மாற்றி,அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு,கணவரை அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால்,அந்த பெண்ணின் கணவர்,தனது மனைவியின் நடவடிக்கைகளின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு,இழப்பீடு தரக் கோரி மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.

மேலும்,தனக்கு வேலை இல்லாததால் வழக்கைத் தொடர,தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும்,இந்த வழக்கு தனக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதலளிக்கும் வகையில் அந்தப் பெண் கூறுகையில்,”என் கணவர் என்னையும்,எங்களது மகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றி,ஆதரவின்றி விட்டுவிட்டார்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”உங்கள் கணவருடைய தொலைபேசியை நீங்கள் உளவு பார்த்ததன் மூலமும், படங்களையும் பதிவுகளையும் குடும்பத்தினருக்கு பகிர்ந்துகொண்டு அவரை அவமதித்ததன் மூலமும்,உங்கள் கணவரின் தனியுரிமையை நீங்கள் மீறியுள்ளீர்கள்,அததற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டன. எனவே,சட்டரீதியான கட்டணம் மற்றும் கணவருக்கு இழப்பீடாக 5,431 திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ .1,07,329) வழங்க வேண்டும்” என்று கூறி உத்தரவிட்டனர்.