செல்போனை பறித்து கொண்டு பைக்கில் தப்பிய இருவர்.!சினிமா பாணியில் விடாமல் துரத்தி மடக்கி பிடித்த எஸ்ஐ.!

சென்னையில் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பித்த போது அவரை விடாமல் துரத்தி எஸ்ஐ ஆண்டலின் ரமேஷ் மடக்கி பிடித்துள்ளார்.

சமீப காலமாக சென்னையில் வழிப்பறி கொள்ளைகள் ஏராளமாக நடந்து வருகிறது.தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்,நகை,பணங்களை பறித்து சென்று விடுகின்றனர் .இதனை குறைக்கவே ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது . இருப்பினும் குற்றங்கள் குறைந்த பாடில்லை .அந்த வகையில் சென்னையை சேர்ந்த ரவி(56) தனது இருசக்கர வாகனத்தில் மாதவரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார் .

அப்போது அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ரவியிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு ஓட ,இதனை எதிர்பாராத ரவி அதிர்ச்சியில் உறைந்துள்ளார் . அதனையடுத்து செல்போன் பறித்து சென்றதாக ரவி கூச்சலிட , அப்பகுதியில் பணியாற்றி வந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் அவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்துள்ளார் .

அதனையடுத்து செல்போனை பறித்து சென்ற குற்றவாளிகளை ரமேஷ் தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்று ,ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் வைத்து குற்றவாளிகள் ஓட்டி சென்ற பைக் கீழே விழ ,அதனை தனது பைக்கால் மோதி அவர்களை பிடிக்க எஸ்ஜ ரமேஷ் முயற்சி செய்தார் .ஆனால் குற்றவாளிகளில் பைக் ஓட்டியவரின் பின்னால் இருந்தவர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓட ,பைக் ஓட்டியவர் திரும்பவும் தனது பைக்கை வேகமாக எடுத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தார் .அப்போதும் எஸ்ஐ ரமேஷ் தனது பைக்கை கீழே போட்டு கொண்டு குற்றவாளியை விடாமல் துரத்தி பிடித்துள்ளார் .

அதனையடுத்து குற்றவாளியை வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அதில் செல்போனை பறித்து சென்றவர் சர்மா நகரை சேர்ந்த அருண் ராஜ்(20) என்பது தெரிய வந்தது.அதனையடுத்து அவர் கூறியதன் படி,தப்பித்து சென்றவர் மாத்தூரை சேர்ந்த நவீன்குமார் (23) என்பதும் ,இவர்களது கூட்டாளியான ராயபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவரையும் கைது செய்தனர் .11 செல்போன்கள் மற்றும் 1 பைக்கையும் போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் நேற்றைய தினம் மட்டும் 4 நபர்களிடம் செல்போனை பறித்து சென்று தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்தது.அதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண் ராஜ் மீது வழிப்பறி, செல்போன் பறிப்பு உட்பட 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

சினிமாவில் நடப்பது போன்று குற்றவாளிகளை எஸ்ஐ ரமேஷ் விடாமல் துரத்தி சென்று மடக்கி பிடித்த காட்சி அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிய ,அதனை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,இது எந்த திரைப்படத்தின் காட்சியும் இல்லை.நிஜ வாழ்க்கையின் ஹீரோவான ஆண்டலின் ரமேஷ் செல்போனை பறித்து சென்ற திருடனை விடாமல் துரத்தி மடக்கி பிடித்தது என்று கூறி ரமேஷை பாராட்டியுள்ளார்.மேலும் அவரை நேரிலையே அழைத்து மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி வெகுமதியும் வழங்கியுள்ளார்.