இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount Ruang) அடுத்தடுத்து நாட்களில் 5 முறை வெடித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த அடுத்தடுத்த எரிமலை வெடிப்பால் அந்நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் சுமார் 11,000 பேர் அபாயம் இருக்கும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்நாட்டின் மனாடோ நகர விமான நிலையமும் மூடப்பட்ட நிலையில், 725 மீட்டர் (2,378 அடி) ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிமீ தொலைவில் யாரும் இருக்கக்கூடாது என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 270 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் செயலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்