சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்… இன்று முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கம்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – திருநெல்வேலி, சென்னை – மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இதில், கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். அப்போது, கோவை ரயில் நிலையத்தில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரதமரின் திருச்சி பயணம்… நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.. ரூ.19,850 கோடியில் திட்டங்கள்!

தொடக்க விழாவையொட்டி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்குப் புறப்பட்ட ரயிலில் தொழில் அமைப்பினா், மகளிா், மாணவா்கள், ஐ.டி. நிறுவன ஊழியா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பயணித்தனா். ஜனவரி 3ம் தேதி முதல் கோவை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

அதன்படி,  கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 20642) சேவை இன்று தொடங்கியது. இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தவிர மற்ற 6  நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.  கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இன்றும், நாளையும் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்