இது அரசியல் அல்ல… எங்கள் கோரிக்கை.! வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். முன்னதாக புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து கேட்டறிந்தார் பிரதமர்.

இதையடுத்து, ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதன்பின், புதிய முனைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், முதல்வரின் உரையில், தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு தான். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைகளை செய்து தரும் முக்கிய கடமை மாநில அரசுக்குத்தான் உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன்

சென்னை – பினாங், சென்னை – டோக்கியோ இடையே விமான சேவையை தொடங்க வேண்டும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழக அரசின் கோரிக்கைகளில் அரசியல் எதுவும் இல்லை. அதாவது, தமிழகத்தின் கோரிக்கைகள் என்பது அரசின் முழக்கமல்ல, மக்களுக்கானது. மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்துதர வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மாநிலத்துக்கான கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு இருக்கும் மக்களின் கோரிக்கைதான் தவிர அரசியல் நோக்கங்கள் இல்லை என்றார்.

எனவே, தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கை மக்கள் கோரிக்கைகளே தவிர அரசியல் ஏதும் இல்லை. இதனால், சென்னை, நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி நிதி வழங்க வேண்டும் என்றும் NDRF நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்