நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்தது.சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது மு.க.ஸ்டாலின் கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேறச் சொன்னதாக பரவியது.
மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது அது வதந்தி என தொல்.திருமாவளவன் கூறினார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தொல்.திருமாவளவன் சந்தித்து அரைமணி நேரம் பேசினார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் , சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் போன்ற அம்சங்களை முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு கவலையும், வேதனையும் அளிக்கிறது. கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பது அங்கு இருக்கும் தமிழக மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என கூறினார்.