#Breaking:முழு ஊரடங்கில் இவர்களுக்கு தடை இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை எழுதச் செல்வோர்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும்,அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்,இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.அதன்படி,

  • ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.
  • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
  • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம்,இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.அவ்வாறு பயணிக்கும் போது,பயணச்சீட்டுவைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க செல்வோர்களுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும்,முழு ஊரடங்கு நாளில் அவர்கள் பயணம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும்,முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,தேர்வுக்கு செல்வோர் தேர்வுக்கூட அனுமதிசீட்டு,நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து விட்டு பயணம் செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.