3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.! 

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் வரையில் சொத்துக்கள் இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

பொன்முடி நிரபராதி : 

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவே குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேல்முறையீடு :

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது பொன்முடி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இளங்கோ, லஞ்சஒழிப்புத்துறை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், விசாலாட்சியின் சொத்துக்கள் , கணக்கு வழக்குகள் பொன்முடி சொத்துக்களாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது என்றும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2023, நவம்பர் 27ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

பொன்முடி குற்றவாளி :

கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யபடுவதாகவும், அமைச்சராக பொன்முடி இருந்த காலக்கட்டத்தில் அவர் 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்களை டிசம்பர் 21ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.

டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் முன் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகினர். இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

3 ஆண்டுகள் சிறை :

இருவரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதி ஜெயசந்திரன், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எதுவாக, சரணடைய 30 நாட்கள் காலஅவகாசம் அளிப்பதாகவும் அதனை மீறினால் காவல்துறைனர் கைது செய்யவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொன்முடி பொறுப்பில் இருந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்ப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு :

இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று விசாரணை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.