முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி என்பவர் வெற்றிபெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு  தேவி என்பவரும் , தேவியை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர்  போட்டியிட்டார்.முதலில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வெற்றிச்சான்றிதழும் கொடுக்கப்பட்டது.பின்னர் பிரியதர்ஷினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேட்பாளர் தேவி உயர்நீதின்மன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் , வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறி இருந்தார். மேலும் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க தடைவிதிக்க வேண்டும் என கூறினார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் ,சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்,சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி என்பவர் வெற்றிபெற்றது செல்லாது என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது .முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.