இந்த போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேலும், இத்திட்டத்தை திரும்ப பெறுமாறு அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அரைகூவல் விடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment