குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது – ஜெயக்குமார்..!

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார்.. ?  என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்து வந்தது.

இதற்கிடையில், அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதனால், நேற்று காலை முதல் மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ஒபிஎஸ் – இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த அறிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

இதன்பின்னர், முதல்வர் , துணை முதல்வர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர்- ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள்.  அதிமுகவின் வழிகாட்டுதல் குழு ஒருமித்த கருத்துடன் தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகுபாடு, வேறுபாடு இல்லை என கூறினார்.

 ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரச்சினைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்த எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது. அந்த வகையில் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம் என தெரிவித்தார்.

author avatar
murugan