காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமானது-திருமாவளவன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமானது. இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.இந்தியாவின் ஒரு பகுதி தான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்வது அப்பட்டமான பொய்.

சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது .அந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிற நேரத்தில் சிறப்புரிமையை நீக்கி இருப்பது காஷ்மீர் மக்களுக்கு செய்கிற துரோகம்.

ஜம்மு காஷ்மீரில் இனிமேல் நிலம் வாங்கலாம் என சொல்கிறார்கள் .அங்கு போய் மக்கள் யாரும் நிலம் வாங்கப் போவதில்லை.தமிழகத்தை ஏற்கனவே சூறையாடிக் கொண்டிருக்கும் அம்பானி, அதானி குழுமங்களும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அங்கு நிலம் வாங்கப் போகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்பவர்கள்தான் மோடியும் அமித் ஷாவும்.பன்னாட்டு நிறுவனங்க ள் தொழில் செய்து முன்னேறுவதற்காக காஷ்மீரின் கதவை திறந்து விட்டிருக்கிறார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக அமித் ஷாவை சந்தித்து பேசியபோது இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும், இதுகுறித்து மேல்மட்ட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம் என்று பேசினார்.