சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘நீராவி பிடிக்கும்’ இயந்திரம்!மக்கள் வரவேற்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி பிடிக்கும் இயந்திரத்தை ரயில்வே காவல்துறையினர் அமைத்துள்ளனர்.இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அதிகளவில் வருகை புரிகின்றனர்.

இதனால்,கொரோனா அதிக அளவில் பரவக்கூடும் என்பதால்,சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய காவல்துறையினர் ஒரு சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.அந்த வகையில்,கொரோனா தொற்று பரவலை தடுக்க காவல்துறை சார்பில் பயணிகள் நீராவி பிடிப்பதற்காக 10 ஆவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.இதில் மஞ்சள்,வேம்பு, துளசி,கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் மூலம் ஆவிபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு முறையும் ஆவி பிடித்த பிறகு முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதனை,சென்ட்ரல் ரெயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமார் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதனையடுத்து,சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய காவல்துறையினரின் இந்த முயற்சி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து,சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமார் கூறுகையில், “ஆவி பிடிப்பதால் சுவாச பிரச்சினைகள் நீங்கும் என சித்தா போன்ற இயற்கை மருத்துவர்கள் அறிவுறுதியுள்ளதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.அதன்படி,தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து,எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.