பறவை கூட்டை முக கவசமாக அணிந்து ஓய்வூதியம் வாங்க வந்த முதியவர்!

தெலுங்கானாவில் முக கவசம் அடிக்கடி வாங்க முடியாததால் பறவை கூட்டை முக கவசமாக  அணிந்து ஓய்வூதிய தொகை வாங்க வந்த முதியவர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி தூய்மையாக இருப்பதும் தான் கொரோனா தொற்றை குறைப்பதற்கான வழி என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே 200 ரூபாய் அபராதம் கட்டுவதற்கு பதிலாக முகக்கவசம் அணிந்து விட்டு செல்லலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக அடிக்கடி முகக்கவசம் வாங்க முடியாமல் தனக்கான ஒரு கவசத்தை பறவை கூட்டில் இருந்து செய்து அணிந்து வந்த முதியவரின் செயல் ஒன்று தெலுங்கானாவில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மக்புப் நகர் எனும் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் பகுதியை சேர்ந்த மேகலா குர்மய்யா எனும் முதியவர் தனது ஓய்வூதிய தொகையை வாங்குவதற்காக மண்டல அலுவலகம் வரை சென்ற பொழுது, துணியாலான முக கவசத்திற்கு பதிலாக பறவைக்கூட்டத்தினால் ஆன முக கவசத்தை அணிந்து சென்றுள்ளார். இவரது இந்த செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளதுடன் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Rebekal