சற்று நேரத்தில்…பஞ்சாப் மாநில புதிய அமைச்சரவை பதவியேற்பு!

முன்னதாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட்,கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

ஆம் ஆத்மி வெற்றி:

இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.

ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்:

இதனையடுத்து,தேர்தல் வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்;ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

முதல்வராக பதவியேற்ற பகவத் மான் :

இதனைத் தொடர்ந்து,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மார்ச் 16 ஆம் தேதியன்று பதவியேற்றார்.சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிலையில்,பகவத் மானுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மஞ்சள் நிற தலைப்பாகை;துப்பட்டா:

இதனிடையே,இந்த பதவியேற்பு விழாவிற்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வரவேண்டும் என்றும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,விழாவிற்கு வருகை புரிந்த ஆண்கள் அனைவரும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்தும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்தும் விழாவில் பங்கேற்றனர்.

அமைச்சரவை பதவியேற்பு:

இந்நிலையில்,பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று சண்டிகரில் பதவியேற்க உள்ளது.

அதன்படி,காலை 10 மணிக்கு ஆம் ஆத்மியின் 10 அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.