ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்த இந்திய அணி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 226 டி20 போட்டிகளில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

டி20 போட்டி 2006-ல் அறிமுகமானதில் இருந்து இதுவரை இந்தியா 213 சர்வதேச டி20  போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 136 போட்டிகளில் வெற்றியும், 67-ல் தோல்வியும், ஒரு போட்டியில் டையும் ஆகியுள்ளது. மூன்று போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  டி20 சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து (200 போட்டிகளில் 102 வெற்றிகள்), ஆஸ்திரேலியா (181 போட்டிகளில் 95 வெற்றிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (171 போட்டிகளில் 95 வெற்றிகள்) பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நேற்று ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 35 ரன்களும் எடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 31 ரன்களும், மேத்யூ ஷார்ட் 22 ரன்களும் எடுத்தனர். பென் மெக்டர்மோட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் தலா 19ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்று டி20  தொடரை கைப்பற்றியது. தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

 

 

author avatar
murugan