#Breaking:யாஸ் புயல் எதிரொலியாக பீகாரில் பாதிப்பு ஏற்படும்-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

யாஸ் புயல் கரையை கடப்பதன் எதிரொலியாக பீகாரிலும் தொடர் கனமழை பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,யாஸ் புயலானது அதிவேக சூறாவளி காற்றுடன்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடப்பதால்,அதன் எதிரொலியாக பீகாரிலும் தொடர் கனமழை பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,அடுத்த மூன்று நாட்களுக்கு அதாவது வருகின்ற 29 ஆம் தேதி வரை பீகாரில் தொடர் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.