பொது மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் – சென்னை மாநகராட்சி.!

நிவர் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்றும்,எனவே தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 180கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 190 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 250கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும், அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பலத்த மழையை எதிர்கொள்ளும் சென்னை மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நிவர் புயலானது இன்று இரவு வலுவான புயலாக கரையை கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண மையங்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் ,நிவர் புயலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன் அதற்கான உத்தரையும் முதல்வர் பழனிச்சாமி பிறப்பித்துள்ளார் .அதன்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் நிவர் புயல் கரையை கடக்கையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ,அனைவரும் தங்கள் இடங்களில் அமைந்துள்ள பேனர்கள் , விளம்பர பலகைகள், பதாகைகள், மற்றும் தட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறும் , தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனுடன் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தியுள்ள நிவாரண மையங்களை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்,அங்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் ,எனவே மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர் .மேலும் இது தொடர்பான பிற விவரங்களுக்கும் ,பிற பாதிப்புகள் குறித்தும் கூற பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்களான 044-25384530 ,044-25384540 மற்றும் தொலைபேசி எண் 1913 என்பதில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆணையர் கோ.பிரகாஷ்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

 Chennai Corporation