#INDvNZ : இந்தியா – நியூசிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..!

5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி  டிராவில் முடிந்தது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் இறங்கிய  இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 52, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஜடேஜா 50 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் 5, அஸ்வின் 3 விக்கெட்டை பறித்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 95, வில் யங் 89 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

2-வது இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயர் 65, விருத்திமான் சாஹா 61, அஸ்வின் 32 ரன் எடுக்க மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை நேற்றைய 4-ஆம் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர் இருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால், இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்த நிலையில் 283 ரன்கள் முன்னிலை பெற்று 284 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்திற்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி 4 ஓவர்கள் இருந்த நிலையில், தனது 2-வது இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. தொடக்க வீரர் வில் யங் விக்கெட்டை அஸ்வின் 2 ரன்னில் 3-வது ஓவரில் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில்  நியூசிலாந்து அணிக்கு 9 விக்கெட்டுகள் 280 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் வில்லியம் சோமர்வில், டாம் லாதம் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

முதல் செசன் முழுவதுமாக விளையாடி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்த வில்லியம் சோமர்வில்லை 36 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி வந்த டாம் லதாம் அரைசதம் அடித்து 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர் ரன் அடிக்க முடியாமல் திணற 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதனால், நியூசிலாந்து  போட்டியை  டிரா செய்வதற்கான அணுகுமுறை கையாண்டனர். இதன் காரணமாக பின்னர் களமிறங்க வீரர்கள் ரன் அடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் விக்கெட்டை இழக்காமல் நேரத்தை கடத்தி வந்தனர்.  அதன்படி, கேப்டன் கேன் வில்லியம்சன் 112 பந்திற்கு வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். டாம் ப்ளண்டெல் 38  பந்திற்கு வெறும் 2 ரன் எடுத்தார். இருப்பினும் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா சுழலில் நியூசிலாந்து அணி வீரர்கள் தாக்குபிடிக்கமுடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

மத்தியில் இறங்கிய ரச்சின் ரவீந்திரன் 91 பந்திற்கு 18 ரன்கள் எடுத்து கடைசிவரை நிற்க இறுதியாக 284 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி  டிராவில் முடிந்தது. இந்திய அணியில் அஸ்வின் 3, ஜடேஜா 4 விக்கெட்டை பறித்தனர்.

 

 

 

author avatar
murugan