மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய  ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும் இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்த்தே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

  • ஊகவணிகத்தைத் தவிர்க்க எதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
  •  சிறு, குறு மற்றும் நடுத்தா தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (auction) பங்கு பெற ஏதுவாக தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.
  • உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய ஐவுளித் துறை அமைச்சர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
murugan