மின்கம்பியை மிதித்த தந்தை, காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் பலி …!

அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் எனும் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய முத்துசாமி என்பவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நேரம், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

முத்துசாமி இதனை கவனிக்காமல் மின்கம்பி மீது கால் வைத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதால் சத்தம் போட்டுள்ளார். மளிகைக் கடையில் வேலை பார்த்துவரக்கூடிய அவரது 19 வயதுடைய மகன் சங்கர் என்பவர் வேலை முடிந்து வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது தந்தையின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சங்கர் குச்சியால் மின்கம்பியில் அடித்துள்ளார்.

ஆனால் அவர் வைத்திருந்த குச்சியும் ஈரமாக இருந்ததால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தந்தை மகன் இருவருமே உயிரிழந்துள்ளனர். தந்தையை காப்பாற்ற சென்ற மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal