தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு ! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு இடையில் தினசரி நிலவரங்களை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.அந்த வகையில் நேற்று  சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் நேற்று  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்தார்.ரத்த மாதிரிகளின் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.நள்ளிரவில் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.