பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் பரபரப்பு புகார்.!

PM Modi : பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தேர்தல் அறிக்கைகளும் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய், காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும், கல்விக்கடன் , விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்  என பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.

இதுகுறித்து நேற்று ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் அறிக்கை போல உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து மக்களிடையே பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமரின் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தலையிட்டு தடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.