பெட்ரோல், டீசல் வரியில் 50 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது – பிடிஆர்

பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.12ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.31.50-ஐ மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 50 பைசாவை மட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கிறது என குற்றசாட்டியுள்ளார்.

மேலும், முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 69 பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என கூறியுள்ளார்.

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் System தவறாக உள்ளது. நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதை தேதி கூற முடியாது. 5 வருடத்தில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதியை திசைத்திருப்ப இந்த அறிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.

மக்களின் தேவையை அறிந்து செயல்படுவோம். வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும். திமுக அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் திருச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்