இந்திய பார் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது -மு.க.ஸ்டாலின்

முதுநிலை சட்டக்கல்விக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு’ என்ற அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் திரும்பப்பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதுநிலை சட்டப் படிப்பிற்கு (எல்எல்எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு” நடத்தப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்து விட்ட மத்திய பா.ஜ.க. அரசு இப்போது, “இந்திய பார் கவுன்சில்” மூலமாகச் சட்டக் கல்வியையும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து – அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும் – கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

எனவே, மாநில உரிமைகளுக்கு விரோதமாக – கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் “முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு” என்று மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து கருத்து அறியாமல், வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும்; ஏழை – எளிய நடுத்தர மாணவர்களும் சட்டக் கல்வி பெறும் வகையில், அரசு சட்டக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு உதவிட முன்வந்திட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.