விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி – ஸ்டாலினை சந்தித்த நிர்வாகிகள்

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து, விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டது.  பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15  நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சொன்ன போது ரத்து செய்யாத பழனிசாமி  ரத்து செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி .இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் சந்தித்து, ’திமுக அரசு அமைந்ததும் விவசாயிகள் கடன்ரத்து’ என அறிவித்து, விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.