“தமிழ்நாடு பாலைவனமாகக்கூடிய சூழ்நிலை உருவாகும்”-ஓபிஎஸ் கண்டனம்..!.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மேகதாதுவில் அணை கட்டப்படும்:

உச்ச நீதிமன்றத்திற்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை சந்தித்தப் பிறகும் “மேகதாதுவில் அணை கட்டப்படும்” என்று மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அதிர்ச்சியை அளிக்கிறது.

அம்மா அவர்களின் ஆணை:

அவர்கள் அறிவித்து இருப்பது மேகதாதுவில் அணைகட்ட 2014 ஆம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி இரண்டு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி என்னால் 5-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பதையும், இந்தத் தீர்மானங்கள் 12-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய கடிதங்கள்மூலம் மத்திய அரசிற்கு உடனடி நடவடிக்கைகாக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, இது தொடர்பாக 26-03-2015 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

கர்நாடக முதலமைச்சரின் தன்னிச்சையான அறிவிப்பு:

குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற மாண்புமிகு கர்நாடக முதலமைச்சரின் தன்னிச்சையான அறிவிப்பு தமிழக மக்களை, குறிப்பாக விவாசயப் பெருங்குடி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

யாராலும் தடுத்து நிறுத்த முடியாது:

“அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள் தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர்:

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்த எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.