“தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்று தேர்வான தமிழ்நாட்டு தடகள வீரர்கள் 5 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது.அதன்படி,ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது.இந்த தடகள பிரிவில் பங்கேற்க 26 இந்திய வீரர் – வீராங்கனைகள் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து,இன்று தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில்,ஒலிம்பிக் போட்டிக்கு இன்று தேர்வான தமிழ்நாட்டு தடகள வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் 7 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.