நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட்!

நாகர்கோவில்:நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு,தாய்,தந்தை,குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்த இரு தினங்கள் கூட ஆகாத நிலையில் நாகர்கோவிலில் இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வடசேரி பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் to திருநெல்வேலிக்கு புறப்பட்ட பேருந்திற்குள் ஏறிய நாகர்கோவிலை சேர்ந்த நரிக்குறவர் குடும்பத்தினரான வயது முதிர்ந்த தாய்,பார்வை மாற்றுத்திறனாளி தந்தையுடன் வந்த ஒரு குழந்தை ஆகிய மூவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டு, அவர்களது உடமைகளை வெளியில் தூக்கி எறிந்து வெளியே செல்லுங்கள் என கூறுகிறார்.

குழந்தை எதற்காக இறக்கி விடப்படுகிறோம் என்பதே தெரியாமல் கதறி அழ,முதியவர் என்ன செய்வதென்று அறியாமல் நடுரோட்டில் நின்றார்.இதனையடுத்து இது தொடர்பான வீடியோ பதிவு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியது.மேலும்,சம்மந்தப்பட்ட ஓட்டுநர்,நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்தது.

இந்நிலையில்,நரிக்குறவர் குடும்பத்தினரை நடுவழியில் இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொறுப்பற்ற முறையில் பணி செய்ததாக கூறி அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து நாகர்கோவில் மண்டல போக்குவரத்து துறை மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.