எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தலைமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம். எனவே இந்த விசாரணைகளை கண்காணிக்க, ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு அமர்வு உயர்நீதிமன்றங்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் உயர்நீதிமன்றம் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களிலிருந்தும் இந்த வழக்கு விசாரணைகளின் நிலை குறித்த அறிக்கைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதைக் கண்காணிக்க தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.