மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது -அண்ணாமலை..!

பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க,  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.கமாநிலத் தலைவர் அண்ணாமலை  பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் பயனடையும் திட்டங்களில் 80% திட்டங்கள் மத்திய அரசு வழங்கியது. மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது.

திமுக தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக உள்ளது. பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பை பொறுத்த வரையில் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என கூறினார்.

author avatar
murugan