‘கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது” – அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவராகவும் ,மத்திய அமைச்சராகவும் உள்ள அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.இவரது வருகை தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமித் ஷா பேசுகையில்,தமிழகத்தில் நாங்கள் செய்ததை பட்டியலிட தயார். திமுக தயாரா..? வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக குறைத்து வந்துள்ளது .இனி வாரிசு அரசியல் தமிழகத்தில் இருக்காது.வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.ஊழலைப் பற்றிப் பேச திமுகவிற்கும், காங்கிரசுக்கும் என்ன தகுதி உள்ளது.   ஊழல் குற்றச்சாட்டை சொல்லும் முன் உங்கள் குடும்பத்தை திரும்பிப் பாருங்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். பத்து ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.

வாரிசு அரசியல் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கோட்டையில் கழகத்தின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது.நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் – வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும் அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment