#IPL2022: காட்டடி அடித்த ரசல்.. ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 61-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவருகிறது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – ரஹானே களமிறங்கினார்கள்.

இதில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, சிறப்பாக ஆடி 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, 28 ரன்கள் எடுத்து ரஹானே தனது விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். 5 ரன்கள் எடுத்து ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ரசல், 28 பந்துகளுக்கு 49 ரன்கள் அடித்து அசத்தினார்.

இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment