சுட்டு வீழ்த்துங்கள் – ட்ரம்பின் அதிரடி உத்தரவு.! வளைகுடா பகுதியில் பதற்றம்.!

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய படகுகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவியுள்ளார்.

உலகமே பெரும்தொற்றான கொரோனா வைரஸில் இருந்து மீள முடியாமல் திணறி வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான போர் பதற்றம் இப்போதும் நிலவி வருகிறது. இந்த இரு நாட்டிடையே அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. பின்னர் பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் சொந்தமான படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். ஈரான் கடற்படையினரின் படகுகளை சுட்டு வீழ்த்த கூறிய அதிபர் ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஈரான் ராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக்கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்