பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்.

கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

பிரதமர் கூறியதாவது, நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்றும் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு சொத்துக்கள் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது கூறியதாக தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது, பிரதமர் பதவியை வகிக்க தமக்கு தகுதியில்லை என மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.

முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தராது என்பதால் தோல்வி பயத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மிக மிக இழிவான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார். பிரதமரின் பரப்புரை மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்