#BREAKING: அதிமுக கொடியுடன் சென்னை புறப்பட்ட சசிகலா..!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலையானார். ஆனால் கொரோனா இருந்ததால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். இது அதிமுகவினர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.

இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், பல இடங்களில் இவருக்கு பேனர்கள் அடிக்கப்பட்டு, இவரை வரவேற்க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலா அவரது காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தி தமிழகம் வருகிறார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் போலீசாரிடம் புகார் அளித்திருந்த நிலையில் மீண்டும் சசிகலா காரில் அதிமுக கொடி பறக்கிறது.

சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா பேரணியாக செல்ல உள்ள இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

author avatar
murugan