“விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்,மணிமண்டபம்”-6 முக்கிய கோரிக்கைகளுடன் பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம்!

சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,அதன்படி வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதல் அவசியம் என்பது கட்டாயம் என்ற நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில்,3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,வேளாண் சட்டம் ரத்து தொடர்பாக சட்டம் இயற்றும் வரை  டெல்லி எல்லையில் போராட்டம்  தொடரும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில்,சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கீழ்க்கண்ட தங்களது 6 கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  1. அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
  2. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,
  3. போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
  4. மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்,
  5. டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும்.
  6. குறிப்பாக,லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும்”,என வலியுறுத்தியுள்ளது.